இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.

மும்பை அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏழாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

2022 ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர்.

ஓப்பனர்கள் சொதப்ப, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரை சதம் கடந்த திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. பவர்ப்ளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணிக்கு, உத்தப்பா, ராயுடு ஆகியோர் ரன் சேர்த்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் நின்றார் தோனி.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்றபோது நிதானமாக ஆடிய தோனி, ஒரு சிக்சர்,பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டி முடிந்து வெற்றியுடன் பெவிலியன் திரும்பும்போது தோனியைப் பார்த்து ஜடேஜா ’Take a Bow' முறையில் உடலை வளைத்து மரியாதை செலுத்தினார்