ஆசிரியர் பதவி உயர்வு விவகாரம்... முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்களின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும்  தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி  உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமான இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது.  நடப்பாண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை அடுத்து,

கடந்த ஜனவரி மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பதவி உயர்வு பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரங்களை  ஏப்ரல் 27 முதல் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நரேஷ் அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற

இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும், இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரைக்க பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் தகுதியானவர்களின் பெயர் விடுபடக்கூடாது என  திட்டவட்டமாக கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, பெயர் விடுபட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆகையால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி முதல்  ஏப்ரல் 30 ஆம் தேதி வரை

அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில்,  தங்கள் கையொப்பத்துடன் கூடிய பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.